by balakarthik on Sat Nov 07, 2009 9:14 pm
புழல் ”சொகுசு” சிறையில் கிடைக்கும் வசதிகள்
சென்னை புழல் சிறைக்குள் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில், கத்தரிக்கோல், கத்தி, ஆயிரக்கணக்கில் லஞ்சப் பணம் கஞ்சா, பீடிக் கட்டுகள் உட்பட போதை வஸ்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை புழல் சிறையில் மூன்று பிளாக்குகள் உள்ளன.
கோடிக்கணக்கான ரூபாய் மோசடி வழக்கில் சிக்கிய நபர்கள், சிறைக்குள் சொகுசு வாழ்க்கை நடத்தும் தகவல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு சென்றது. புழல் சிறைக்குள் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி., போலோநாத், கூடுதல் டி.ஜி.பி., ராமானுஜம் உத்தரவிட்டனர்.
எஸ்.பி.,க்கள் லட்சுமி, பவானி ஈஸ்வரி தலைமையில் டி.எஸ்.பி.,க்கள் ஆகியோருடன் 14 இன்ஸ்பெக்டர்கள், 40க்கும் மேற்பட்ட போலீசார், தனித்தனி வாகனங்களில் புழல் சிறைக்கு முன்பாக சில நூறு மீட்டர் தள்ளி நின்றனர். கூடுதல் டி.ஜி.பி., ராமானுஜம், "புழல் சிறைக்குள் சென்று சோதனை நடத்தவுள்ளோம். அதற்கு உங்கள் அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும்' என, சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., ஷியாம் சுந்தரிடம் கூறியுள்ளார்.
சிறைக்குள் செல்ல அனுமதி கிடைத்ததை அடுத்து, தனிப்படை போலீசார் புழல் சிறை -2 பிளாக்கிற்குள் நுழைந்தனர். அப்பிளாக்கில் 1,500 க்கும் மேற்பட்ட விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டு இருந்தனர். சிறை எஸ்.பி., ராஜேந்திரன், கூடுதல் எஸ்.பி., கருப்பணன், ஜெயிலர் இளவரசன், விஜிலென்ஸ் போலீசாரின் சோதனைக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர்.
சிறைக் கைதிகள் நேர்காணல் நடைபெறும் பகுதியில் நடந்த சோதனையில், உதவி ஜெயிலர் ராஜேந்திரன் வைத்திருந்த நோட்டுப் புத்தகத்தில் ரூபாய் நோட்டுகள் சொருகி வைக்கப்பட்டிருந்தன. 3,000 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். வெடிகுண்டு மற்றும் தடா கைதிகள் அடைக்கப்பட்டிருந்த உயர் பாதுகாப்பு சிறையில் நடந்த சோதனையில், சிறை வார்டன் சிவசங்கரனிடம் இருந்து 700 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மற்றொறு சிறை வார்டன் நாகராஜன் என்பவரிடம் இருந்து 250 ரூபாய் பணம் சிக்கியது.
இரவு 9 மணி அளவில் சோதனை முடிந்து வெளியில் வந்த லஞ்ச ஒழிப்பு அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, அவர் திடுக்கிடும், சுவையான பல்வேறு தகவல்களை தெரிவித்தார்.அவர் கூறியதாவது:-
இந்த அதிரடி சோதனையின் போது ஜெயில் அதிகாரிகளின் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளது. பல அதிகாரிகளின் அறைகள் சிறிய மளிகை கடை போல் காட்சி அளித்தன. கைதிகளுக்கு விற்பனை செய்வதற்காக பீடி, சிகரெட் பாக்கெட்டுகள் பண்டல், பண்டலாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. பொடி டப்பாக்களும் இருந்தன. சிகரெட் லைட்டர்களும் இருந்தன.
ஒரு அதிகாரியின் அறையில் ஆபாச பட சி.டி. கேசட்டுகள் ஏராளமாக கைப்பற்றப்பட்டது. சி.டி.களை கைதிகளுக்கு போட்டு காண்பிப்பதற்காக 4 கலர் டி.வி செட்டுகள் கைதிகளின் அறைகளின் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டது. ஆபாச படம் பார்ப்பதற்கு கைதிகளிடம் தனி கட்டணம் வசூலிக்கப்படுமாம். நான்கு சிறைக் கைதிகள் அவர்களது அறையில் சொந்த செலவில் "டிவி' வாங்கி பயன்படுத்தி வந்துள்ளனர். சிறையில் உள்ள கேபிள் "டிவி' வசதி, அந்த நான்கு கைதிகளும் முறைகேடாக தரப்பட்டிருந்தையும் கண்டுபிடித்தனர்
சோதனை நடந்த அனைத்து அதிகாரிகளின் அறைகளிலும் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது. சிறை டாக்டர் கூட பீடி, சிகரெட்டுகள் விற்பார் போலும். அவரிடமும் அவை கைப்பற்றப்பட்டன.
உணவுப்பொருட்கள் கிட்டங்கியில் சோதனை செய்த போது அதிர்ச்சியூட்டும் பல விஷயங்கள் கிடைத்தது. நேற்றைய கணக்குபடி கிட்டங்கியில் 550 கிலோ அரிசிதான் இருக்க வேண்டும். ஆனால் இருப்பை சரிபார்த்த போது 1200 கிலோ அரிசி இருந்தது. இதே போல பருப்பு போன்ற மற்ற பொருட்களின் இருப்பும் 2 மடங்கு அதிகமாக இருந்தது.
இது பற்றி விசாரித்த போது, நிறைய கைதிகள் ஜெயில் சாப்பாட்டை சாப்பிடாமல், அதிகாரிகளை கவனிக்க வேண்டியபடி கவனித்து, வெளியில் இருந்து நாவுக்கு ருசியான சாப்பாட்டை வரவழைத்து சாப்பிட்டு விடுவார்களாம். இந்த கைதிகள் ஜெயில் சாப்பாட்டை சாப்பிடாததால் தான் உணவுப்பொருட்களின் இருப்பு அதிகமாக உள்ளதாக தெரியவந்தது. அதிகமாக இருக்கும் உணவுப்பொருட்கள் வெளியில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக சொல்லப்படுகிறது. அதுபற்றியும் விசாரணை நடத்தப்பட உள்ளது. சிறை விதிகளுக்கு மாறாக செயல்பட்ட அதிகாரிகள் மீது முறைப்படி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்படும்.
ஆறுமுகம் என்ற கைதிதான் அதிகாரிகளிடம் இருக்கும் பொருட்களை கைதிகளுக்கு வாங்கி கொடுத்து வியாபாரம் செய்யும் இடைத்தரகர் வேலை பார்ப்பதாகவும், கைதிகள், பார்வையாளர்களிடம் வசூல் வேட்டை நடத்துபவரும் இவர்தான் என்று தெரிய வந்தது. இவர் ஜெயில் அதிகாரி போல வலம் வந்துள்ளார்.ஆறுமுகம் அறையில் இருந்து, சிறைத்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் அவர்களது பதவி குறிப்பிடப்பட்ட "ஆபீஸ் சீல்'கள் சிக்கின. இவர் விசாரணை பிடியில் உள்ளார். மகாநதி சினிமா படத்தில் வருவது போன்ற காட்சிகளை நாங்கள் சோதனை நடத்திய போது ஜெயிலில் நேரடி காட்சியாக கண்டோம்.
சிறையில் உள்ள அறைகளில் நடந்த சோதனையில், தலையணை மற்றும் போர்வைக்கு கீழே மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்திரிக்கோல், கத்தி ஆகியன சிக்கின. சிறையில் உள்ள கைதிகளுக்கு எந்தவகை உணவு வழங்க வேண்டும் என, சிறைத்துறை டாக்டர் சோமசுந்தரம் சிபாரிசு செய்வார். அசைவ உணவு மற்றும் கைதிகளுக்கு சிகிச்சை அளிக்க 50, 100 ரூபாய் லஞ்ச பணம் வசூலித்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.சிறை டாக்டரிடம் இருந்து 1,800 ரூபாய் லஞ்சப் பணம் பறிமுதல் செய்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட பீடிக் கட்டுகள், சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. .
வெளியில லஞ்சம் வாங்கினா ஜெயிலுக்கு அனுப்புவாங்க, ஜெயில்லயே லஞ்சம் வாங்கினா எங்க அனுப்புவாங்க?